Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மன்னார்குடி: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 400 கோடி ரூபாய் கையிருப்பு நிதியிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாட தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பூசாரிக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,'' என மாநில தலைவர் வாசு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர், தஞ்சாவூர் கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களின் மாநில ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் வாசு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம பூசாரிகளுக்கு மாவட்டந்தோறும் வழிப்பாட்டு பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். பூசாரிகளின் வாழ்வாதரம் மிகவும் சிரமத்தில் உள்ளதால் தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் திருக்கோவிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு திருக்கோவில் நிதியிலிருந்து ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு தெரிவித்ததாவது:
கிராமப்புற பூசாரிகளுக்கு மாத ஊதியத்துடன் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சென்னை உயர் நீதீமன்றம் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரையிலும் எந்த ஆணையும் வழங்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் 17 நல வாரியங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், கிராமபுற பூசாரிகள் சங்கம் செயல்படவில்லை.
இதனால் தமிழக அரசு சார்பாக பூசாரிகளுக்கு எந்த விதமான நலதிட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. உடனடியாக பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தி மாத ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 400 கோடி ரூபாய் கையிருப்பு நிதியிலிருந்து பூசாரிகள் தீபாவளி பண்டிகை கொண்டாட தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பூசாரிக்கும் ரூ.5 ஆயிரம் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு தெரிவித்தார்